பார்வை குறைபாடுள்ளவர்கள் ப்ரெய்ல் மூலம் எளிதாக எழுத்துக்களைப் படித்து விடுகிறார்கள். ஆனால் எழுதுவதற்கு ப்ரெய்ல் எளிதல்ல. எழுதுவதற்கு ப்ரெய்ல் காகிதத்தில் ப்ரெய்ல் ஆணியைக் கொண்டு குத்தி குத்தி எழுதவேண்டும். இதற்கு மிகவும் நேரம் எடுக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இதனால் தொழில்நுட்பத்தின் உதவியால் பெரும்பாலும் ஒலிப்பிரதி எடுத்துக்கொள்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப கருவிகள் வந்த பிறகு ப்ரெய்ல் பயன்பாடு உலகம் முழுவதும் (தமிழகம் உட்பட) மிகவும் குறைந்துவிட்டது.
இவ்வாறு ஒலிப்பிரதி எடுப்பது பயனுள்ளதாக இருந்தாலும், அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. பிரதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியை படிக்க, ஆரம்பத்தில் இருந்து கேட்க வேண்டும். அதே போல் செய்தியில் திருத்தங்கள் செய்வதும் இயலாததாக இருக்கிறது.
ப்ரெய்ல் எழுத்துக்களைப் பதிவிட, ப்ரெய்ல் பதிவு கருவிகளும், ப்ரெய்ல் அச்சுக்கருவிகளும் உள்ளன. ஆனால் அவை மிகவும் விலை அதிகமானவையாக உள்ளன. உதாரணமாக, கணினிக்கான குறைந்த பட்ச அச்சு எந்திரத்தின் விலை சுமார் ₹2000/-. ஆனால் ஒரு குறைந்த விலை ப்ரெய்ல் அச்சு எந்திரம் சுமார் இரண்டு லட்ச ரூபாய். ப்ரெய்ல் பதிவுக் கருவிகள் சுமார் ₹50,000/- இல் இருந்து உள்ளன. ஆனால், ஆங்கிலத்துடன் தமிழ் வசதியும் வேண்டும் என்றால், விலை ஏறக்குறைய இரட்டிப்பு ஆகிறது. எப்படியென்றாலும், பார்வைக்குறைபாடுள்ள ஒரு சாமானிய தமிழனுக்கு இக்கருவிகள் எட்டாக்க்கனியாகவே உள்ளன.
பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கும் நம்மைப் போல் எண்ணங்களை பதிவிடவும், பாடல், கதைகள், கட்டுரைகள் அல்லது இலக்கியங்களை உருவாக்கவும் விருப்பம் இருக்கும். அவர்கள் தங்கள் படைப்புகளைப் பதிவிட பார்வை உள்ளவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை உள்ளது. தங்கள் படைப்புகளில் திருத்தங்கள் செய்யவும், தங்கள் படைப்புகளை பிரசுரிப்பதற்கு மென் நகல் (soft copy) எடுக்கவும் மற்றொருவரை எதிர்பார்ப்பதால், அவர்களால் அதிகமான புதிய படைப்புகளை உருவாக்க முடிவதில்லை.